சமுதாய சொந்தங்களே…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நபிமார்கள் ஒவ்வொருவர் மூலமும் ஒரு வரலாற்றை அல்லாஹ் நமக்கு சொல்லிக்காட்டுவதின் நோக்கம், அதில் படிப்பினையை இந்த மனித சமுதாயத்திற்க்கு வைத்துள்ளான்.
நபி ஆதம் (அலை) அவர்கள் தொடங்கி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரை இவ்வுலகிற்கு வந்த இறை தூதர்களின் வாழ்க்கையின் முக்கியமான படிப்பினைகள் என்ன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
நபிமார்களின் சமூகங்கள் :
- அல்லாஹ் நபி ஆதம் (அலை) அவர்களை படைத்து அவர்களின் துணைவியாரை அவரின் விலா எலும்பிலும் படைத்து, அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக்கொடுத்தான். பின்னர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்த காரணத்தால் சுவனத்திலிருந்து வெளியேற அல்லாஹ் உத்தரவிட்டான். அப்படி வெளியேரி இந்த உலகத்திற்கு வந்த ஆதம் (அலை) அவர்களின் மக்களாகிய நாம் தவறு செய்யக்கூடியவர்களாகவே ஆனோம். ஆனால் தனது தவறை உணர்ந்து திருத்திக்கொண்டு அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்பவர்களே சிறந்தவர்கள்.
- நூஹ் (அலை) அவர்களை சிலைகளை வணங்கி வந்த சுமேரியர்களுக்கு நபியாக அனுப்பினான். பல நூறு ஆண்டு காலம் அழைப்புப்பணி செய்தும் அவ்வூரார் திருந்துவதாக இல்லை. இறுதியாக நூஹ் (அலை) அவர்களிடம் ஒரு கப்பலை செய்ய சொல்லி அல்லாஹ் உத்தரவிட்டான். அப்போதும் கூட அவ்வூரார் ஏளனமாகவும், கிண்டலடித்தும் வந்தனர். இறுதியாக நூஹ் (அலை) அவர்களையும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களையும், இன்னும் பிராணிகளில் அனைத்தையும் ஜோடி ஜோடியாகவும் கப்பலில் ஏற்றி அல்லாஹ் அவர்களை காப்பாற்றி, மிகப்பெரும் வெள்ளப்பிரளயத்தால் அம்மக்களையும், அவ்வூரையும் அழித்தான்.
- ஹூத் (அலை) அவர்களை, செல்வம் கொடுக்கப்பட்டு செழிப்போடு பெரும் கோட்டைகளை கட்டி வாழ்ந்துவந்த ஆது கூட்டத்தாருக்கு நபியாக அல்லாஹ் அனுப்பினான். அக்கூட்டத்தார் பொய் பேசி இறைவனை நிராகரித்ததற்காக பேரொழியுடன் கூடிய காற்றை வீசச் செய்து அல்லாஹ் அழித்தான்.
- லூத் (அலை) அவர்களை பலஸ்தீன நாட்டின் கிழக்கு பகுதிக்கு அல்லாஹ் நபியாக அனுப்பினான். ஆனால் அந்த மக்களோ, ஓரிணப்புணர்சியில் ஈடுபட்டு வந்தனர். எவ்வளவோ தடுத்தும் அல்லாஹ்வை பொய்ப்பித்து மானக்கேடாக நடந்து கொண்டதோடல்லாமல் அவ்வூரை அழிக்க மனித உருவில் வந்த மலக்குமார்களையும் தங்களின் குற்றத்திற்கு அழைத்தனர், ஆகவே தண்டனை பற்றிய உத்தரவு இடும் முன் லூத் (அலை) அவர்களையும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களையும் அவ்வூரை விட்டு வெளியேர அல்லாஹ் உத்தரவிட்டான். அதன் பின் அல்லாஹ் அவ்வூரின் மேல் தட்டை கீழ் தட்டாக புறட்டிப் போட்டான். இன்னும் சுடப்பட்ட கற்கலாலும், இரசாயன மலையாலும், பூகம்பத்தாலும் அழித்தான்.
- மூசா (அலை) அவர்களை இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பினான். காளை கன்றை தெய்வமாக வணங்கி வந்தனர். அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கவும், ஆணவத்துடன் பச்சிளங்குழந்தைகளை கொலை செய்தும், கொடூர ஆட்சி செய்தும், சூனியம் செய்துகொண்டும், நான் தான் கடவுளுக்கெல்லாம் பெரிய கடவுள் என்றும் சொல்லிவந்த ஃபிர்அவுன் என்னும் மன்னனை எச்சரிக்கவும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டார்கள். அவனோ திருந்த மறுத்தான். பின்னர் கடலில் மூழ்கடித்து ஃபிர்அவுனையும் அவன் சூனியத்தையும், அவன் ஆணவத்தையும், அவன் கூட்டத்தையும் அல்லாஹ் அழித்து அவனை உலக மக்களுக்கு அத்தாட்சியாக்கினான்.
- சாலிஹ்(அலை) அவர்களை ஸமூது கூட்டத்தார்களுக்கு நபியாக அல்லாஹ் அனுப்பினான். ஸமூது கூட்டத்தாருக்கு அல்லாஹ் மலைகளை வெறும் கைகளால் குடையும் வலிமையை கொடுத்திருந்தான். அதன் காரணமாக அம்மக்கள் ஆணவத்துடனும், கொள்ளை அடித்தல் போன்ற குற்றங்களையும் புரிந்து வந்தனர். மேலும் அதற்க்காக 9 சங்கங்களையும் அமைத்திருந்தனர். மேலும் அல்லாஹ்வை நிராகரித்தும் வந்தனர். அல்லாஹ் அத்தாட்சியாக ஒரு அதிசய ஒட்டகத்தை அச்சமூகத்தின் மத்தியில் தொன்றச்செய்து அதனை சுதந்திரமாக விட்டுவிட சொன்னான். அவர்களோ பெரும் ஆணவத்துடன் அல்லாஹ்விற்கே சவால் விட்டனர். அவ் ஒட்டகத்தை கொலை செய்தனர். அதன் காரணமாக அல்லாஹ் பேரிடியை கொண்டு அவர்களை அழித்தான். அதிகாலையில் அவர்களின் மலைக்கோட்டைகளில் அழிந்து கிடந்தனர்.
- ஷுஐப் (அலை) அவர்களை மத்தியன் வாசிகளுக்கு நபியாக அல்லாஹ் அனுப்பினான். அம்மக்களோ,அல்லாஹ்வை நிராகரித்தும், எடையில் மோசடி செய்தும் வந்தனர். எவ்வளவோ உபதேசித்தும், அல்லாஹ்வின் தண்டனை குறித்து எச்சரித்தும் அவர்கள் திருந்துவாக இல்லை. இறுதியாக ஷுஐப்(அலை) அவர்களையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் அல்லாஹ் தன் ரஹ்மத்தால் காப்பாற்றி, ஸமூது கூட்டத்தாரைப் போலவே மத்தியன்வாசிளையும் பேரிடியின் முழக்கத்தைக் கொண்டு அழித்தான். அவர்கள் இதற்க்கு முன் அங்கு வாழ்ந்திராதவர்களைப்போன்று அல்லாஹ் ஆக்கினான். இப்படி ஒவ்வொறு கூட்டத்தாருக்கும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி அவர்களின் தீய செயலை விட்டும் திருந்த உபதேசித்தான். அதனை ஏற்க்காத மக்களை எவ்வாறு அழித்தான் என்பதனையும் முஹம்மது நபியின் உம்மத்திற்கு படிப்பினையாகவும் ஆக்கியுள்ளான். ஆனால் இவற்றை எல்லாம் மறந்து ஒவ்வொறு நபிமார்களின் கூட்டத்தாரும் செய்துவந்த அனைத்து குற்றங்களையும் செய்து கொண்டு வாழும் இந்த சமூகத்துக்கு அல்லாஹ்விடத்தில் எப்பேர் பட்ட தண்டனை காத்திருக்கின்றதோ?
இறைவன் நாடினால் பகுதி 4 ல் தொடருவோம்…